இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி... விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா?
அன்னூர் அருகே சுப்பிரமணிய கவுண்டன் புதூர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அவல நிலையில் உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டியை உடனடியாக இடித்து விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கரியம்பாளையம் ஊராட்சியில் உள்ளது சுப்பிரமணிய கவுண்டன் புதூர் கிராமம். இங்கு 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
தற்போது நீர் தொட்டியின் 4 தூண்களும் மற்றும் மேல் தொட்டியும் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் மேல்புறத்தில் 3 அடியில் அரசமரம் வளர்ந்து உள்ளது.
இதனால் இந்த நீர்தேக்க தொட்டியை உடனடியாக இடித்து விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நீர் நிலை தொட்டியானது ஒருவேளை சரிந்து விழுந்தால் அதன் அருகாமையில் வீடுகள் உள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை விபத்து ஏற்படும்வரை வேடிக்கை பார்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

No comments
Thank you for your comments