Breaking News

விற்பனை கூட அதிகாரிகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாறி மாறி, முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாறி மாறி, முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், கம்பு, மணிலா, சோளம் உள்ளிட்ட பல்வேறு தானிய பொருட்களை விற்பனை செய்வதற்காக வந்து செல்கின்றனர். விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்கு, வியாபாரிகள் மறைமுக ஏல சீட்டு முறையில், கொள்முதல் செய்து வந்தனர்.  

இந்நிலையில் வழக்கம் போல் விவசாயிகள் கொண்டு வந்த, மணிலா,  சோளம் தானிய பொருட்களுக்களின்,  விலைப்பட்டியலை, இ- நாம் மொபைல் ஆப் மூலம் கொடுக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் கூறியுள்ளனர். 

ஆனால் வியாபாரிகள் அவ்வாறு விலைப்பட்டியலை இ- நாம் திட்டத்தின் மூலம் கொடுக்க முடியாது என்றும், இ-நாம் திட்டத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்றால், விவசாயிகள் கொண்டு வரும் தானிய பொருட்களை வகைப்படுத்தி, தரம் பிரித்துக் கொடுத்தால், விலை நிர்ணயம்  மற்றும் பண பரிவர்த்தனை அத்திட்டத்தின் மூலம் செயல்படுத்துவதாக வியாபாரிகள் அதிகாரியிடம் தெரிவித்தனர். 

மேலும்  ஆன்லைனில் விலை நிர்ணயம் செய்தால், பல்வேறு குளறுபடிகள் வரும் என, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அலுவலகத்திலிருந்து, நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள்,  வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களை, வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்யாமல் புறக்கணிப்பு செய்ததால், பல மணி நேரமாக காத்திருந்த விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரியை முற்றுகையிட்டு, விலை போட சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள்,  மாறி மாறி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு உடனடியாக செல்போன் மூலம் விலை நிர்ணயம் செய்யும் முறையை, தள்ளுபடி செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்சனையால், விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆன்லைன் மூலமாக,  விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்வதால், யாருக்கும் எந்தவித பாதிப்பில்லை என்றும், பல்வேறு மார்க்கெட் கமிட்டிகளில் ஆன்லைன் மூலம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், விருத்தாச்சலம் வியாபாரிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.


No comments

Thank you for your comments