அ.தி.மு.க., ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக தமிழ்நாட்டையே சீரழித்துவிட்டனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை :
அ.தி.மு.க ஆட்சியில் கடந்த பத்து ஆண்டு காலமாக சென்னையை மட்டுமல்ல, தமிழ்நாட்டையே சீரழித்து விட்டு சென்றிருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் பொதுமக்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை 29.10.2022 அன்று தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 26/09/2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில், அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (01/11/2022), மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு செய்து உரிய அறிவுரைகளை வழங்கினார்.
கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, மாநிலத்தில் பெய்துவரும் மழை, வெள்ளம் குறித்த விவரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் குறித்து கேட்டறிந்தார்.
மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுப்ப வேண்டிய முன்னெச்சரிக்கை செய்திகளை உடனடியாக அனுப்பவும், 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக வரப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.
மேலும், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு கள நிலவரத்தை கேட்டறிந்து, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டதுடன், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட பொதுமக்களிடமும் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும், வெள்ளப் பாதிப்பு குறித்த புகார் தெரிவிக்கப்பட்டவுடன் அரசு துரிதமாக செயல்பட்டு பாதிப்புகளுக்கு தீர்வு கண்டு வருவதற்கு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளித்து பேசினார்.
கேள்வி: வட சென்னையில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாக உங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறதா?
பதில்: வந்திருக்கிறது. அதை அப்போதைக்கப்போது அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: போன முறை இல்லாத அளவுக்கு தண்ணீர் எங்கேயும் பெரிய அளவில் இல்லை.
பதில்: நான் சொல்லக் கூடாது அதை, நீங்கள் சொல்கிறீர்கள்.
கேள்வி: தி.நகர் போன்ற பகுதிகளில் தண்ணீர் இல்லை. சில இடங்களில் இருக்கிறது. அதையும் சரி செய்யஞ்ஞ்
பதில்: அ.தி.மு.க ஆட்சியில் கடந்த பத்து ஆண்டு காலமாக சென்னையை மட்டுமல்ல, தமிழ்நாட்டையே சீரழித்து விட்டு சென்றிருக்கிறார்கள். அதை சரி செய்ய வேண்டுமென்றால், ரொம்ப வருஷம் ஆகும். இருந்தாலும் நாங்கள் ஒன்றரை வருடத்திற்குள் முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments