ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
காவாந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திடவும், அரசு சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சிசிடிவி காமிராக்களை பொருத்தக்கோரியும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சங்கம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில், காவாந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திடவும், அரசு சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சிசிடிவி காமிராக்களை பொருத்தக்கோரியும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.எம்.வெங்கடடேசன், செயலாளர் எஸ்.பாரத் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஊராட்சி மன்ற தலைவர்களும் கோரிக்கை மனுவை அளித்தனர்.
கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘காவந்தண்டலம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகவே பணிதளப் பொறுப்பாளர்களை மிரட்டி, 50 முதல் 100 வேலை வாய்ப்பு அட்டைகள் மூலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரஸ்வதியின் கணவர் சீனிவாசன் முறைகேடாக பணம் பெற்றுள்ளார்.
அது தொடர்பாக இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபட கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் ராதா விஜயகுமார், அவரை எச்சரித்து, கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதியன்று காவாந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் ராதா விஜகுமார் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஊராட்சி மன்ற துணை தலைவர் சரஸ்வதியின் கணவர் சீனிவாசன் அத்துமீறி உள்ளே நுழைந்து, வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு தகாத வார்த்தைகளை பேசி ஊராட்சி மன்ற தலைவர் ராதா விஜயகுமாரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் ராதா விஜயகுமாரை, ரத்த காயங்களுடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தர்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிக்லை. ஆகையால் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர் மீது, உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், அரசு சார்பில் சிசிடிவி காமிராக்களை பொருத்த வேண்டும்’’ என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments
Thank you for your comments