30 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பக்குளத்தில் மழைநீர் நிரப்பும் பணி-காஞ்சி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
காஞ்சிபுரம்,அக்.16-
காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீர் செல்லும் பாதைகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து ஞாயிற்றுக்கிழமை அதில் தண்ணீர் குளத்துக்கு போகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் உடையது காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்டப் பெருமாள் திருக்கோயில். இக்கோயில் அருகில் படிக்கட்டுகளுடன் தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது.ஏராளமான குடியிருப்புகளுக்கு நடுவில் உள்ள இக்குளத்தில் தண்ணீர் இருந்தால் அருகில் உள்ள வீடுகளில் நீர்ஆதாரமும் பெருகும்.
இதற்காக கடந்த 1980 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வேசாலை,வைகுண்டப் பெருமாள் கோயில் சந்நிதி தெரு ஆகிய பகுதிகள் வழியாக பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்து மழைநீரை நிரப்பியிருக்கின்றனர்.காலப்போக்கில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் மூடப்பட்டு அதன் மேல்பகுதியில் சாலையும் போடப்பட்டிருந்ததால் மழைநீர் குளத்துக்கு வருவது தடைப்பட்டிருந்தது.
இதனையறிந்த காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் குளத்துக்கு மழைநீர் வரும் குழாய்களை கண்டுபிடிக்கு மாறு பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மாநகராட்சி பொறியாளர் கணேசன்,உதவிப் பொறியாளர் சரவணன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் பூமிக்கடியில் செல்லும் குழாய்களை கண்டு பிடித்ததுடன் அவற்றின் மூலம் மழைநீர் சீராக செல்லும் வகையில் பொதுநிதியிலிருந்து ரூ.15லட்சம் மதிப்பில் கால்வாயும் அமைத்தனர்.
பின்னர் மாநகராட்சி குடிநீர் லாரி மூலம் அக்கால்வாயிலும்,குழாய்களிலும் தண்ணீர் தெப்பக்குளத்துக்கு போகிறதா என ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் தெப்பக்குளத்துக்கு மழைநீர் செல்வதை உறுதி செய்தனர்.30 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீர் தெப்பக்குளத்துக்கு செல்லும் வகையில் குழாய்களை கண்டுபிடித்த அதிகாரிகளை அப்பகுதி குடியிருப்புவாசிகள் பலரும் பாராட்டினார்கள்.


No comments
Thank you for your comments