அக்.25ம் தேதி காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்
காஞ்சிபுரம்,அக்.15-
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டித் திருவிழா இம்மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முருகப்பெருமானின் வரலாறான கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரிய திருக்கோயிலாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.இங்கு ஆண்டுதோறும் கந்தசஷ்டித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான திருவிழா ஆக.25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 6 மணி முதல் 7 மணிக்குள் துலா லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.விழாவினை முன்னிட்டு விழா நடைபெறும் 6 நாட்களும் முருகப்பெருமான் காலையில் பல்லக்கிலும்,மாலையில் தினசரி வெவ்வேறு வாகனங்களிலும் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனிவரவுள்ளார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சூரசம்ஹாரம் ஆக.30 ஆம் தேதி ஆலயத்தின் முன்பாக நடைபெறுகிறது. மறுநாள் திங்கள்கிழமை இரவு தெய்வானை திருக்கல்யாணமும்,யானை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.
தினசரி இரவு சிறப்பு தீபாராதனைகளும்,கோயில் கலையரங்கில் காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ச.தெய்வசிகாமணி அவர்களது கந்தபுராணச்சொ ற்பொழிவும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

No comments
Thank you for your comments