நடமாடும் கதிர்வீச்சு வாகனத்தை.. தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சு.,
கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டாரத்தில் வரும்முன்காப்போம் திட்ட முகாமினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டாரம், குரும்பாளையம் துணை சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்து, அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும்முன்காப்போம் திட்ட முகாம் மற்றும் நடமாடும் கதிர்வீச்சு வாகனத்தை இன்று (07.07.2022) மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.டி.எஸ்.செல்வவிநாயகம்> துணை இயக்குநர் மரு.அருணா, மதுக்கரை நகர்மன்ற தலைவர் நூர்ஜஹான், நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டாரம், குரும்பாளையத்தில் சி.எஸ்.ஆர் நிதி பங்களிப்புடன் ரூ.27இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதிநிலை அறிக்கையில், கலைஞரின் வருமுன்காப்போம் திட்டத்தின் கீழ், ஆண்டொன்றிற்கு 1250 மருத்துவ முகாம்கள் , 17 முதல் 20 வரையிலான சிறப்பு மருத்துவ பிரிவுகளுடன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1260 முகாம்கள் கடந்த ஒராண்டில் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் 9,04,450 பேர் மருத்துவ பயன் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டதின்கீழ் மீண்டும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று 461வது முகாம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு இதுவரை 4,29,049 பேர் மருத்துவ பயன் பெற்றுள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 01.07.2022 அன்று சென்னை நொச்சி குப்பத்தில் காசநோய் இல்லா தமிழ்நாடு- 2025 என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65கோடி மதிப்பீட்டில் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்து, யாருக்கெல்லாம் காசநோய் உள்ளது என கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில், இ-பார்வை திட்டம் கடந்த மூன்று மாதங்களாக செயல்பாட்டில் உள்ளது. இந்த அதிநவீன திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 1.25இலட்சம் பேர் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஓராண்டிற்கு 6 இலட்சம் பயனாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் கேட்ராக்ட் அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதிநவீன வசதிகளுடன் கூடிய அந்த பரிசோதனைகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்படும். இந்த திட்டமும் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மருத்துவ பயன்களை அடைந்து வருகின்றனர்.
நிதிநிலை அறிக்கையின்போது இத்துறையின் மூலம் அறிவிக்கப்பட்ட 136 அறிவிப்புகளில் 18 அறிவிப்புகள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஒவ்வொன்றாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது அந்த வகையில் கண்புரை அறுவை சிகிச்சை புதிய அறிவிப்பு இன்று துவங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டமானது, 1700 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1090 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 இலட்சம் வரை காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றார்கள். குறிப்பாக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.15 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரை பயனடைகின்றனர். இருதய, நுரையிரல், கல்லீரல், எலும்பு ஆகிய மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 இலட்சம் வரை பயன்பெறுகின்றனர்.
ஒரு மாவட்டத்தில் ஒரு இடத்தில் மட்டுமே என்ரோல்ட்மெண்ட் சென்டர் மூலம் மருத்துவ காப்பீட்டுக்கான அட்டை வழங்கப்பட்டு வந்தது. சென்னையில் தற்போது கூடுதலாக ஒரு இடம் சேர்த்து இரண்டு இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேவைப்பட்டால் இன்னொரு இடத்திலும் கூட என்ரோல்ட்மெண்ட சென்டர் துவக்கப்படும்.
WHO அறிவிப்பின் படி உலகில் 110 நாடுகளில் கொரோனா தொற்று பெரிய அளவில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் 15க்கு மேற்பட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. கேரளா மாநிலத்தில் தினந்தோறும் 2000 முதல் 3000க்கு மேற்பட்டோர் கடந்த நான்கு மாதங்களை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து 22 பேருக்கு பாதிப்பு என்ற குறைந்த அளவிலான இருந்த நிலையில், தற்போது தொற்று பரவல் சுமார் 2700 என்ற அளவில் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம்பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
5 சதவீதம் பேர் மட்டுமே தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பெரியதாக பாதிப்பு எதுவும் இல்லை. கடந்த 3 மாதங்களால் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டு பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
அவர்களுக்கும் கொரோனா தொற்று மட்டுமில்லாமல், அவர்களுக்கு இருதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த பாதிப்பு இணைநோய்கள் இருந்துள்ளது. அவர்கள் காய்ச்சல் இருந்து சில நாட்கள் கழித்துதான் மருத்துவமனைக்கு வந்தார்கள். அதனால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தற்போது தினசரி 1600 நபர் வரைக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை செய்வதால் பாதிக்கப்பட்டவர்களை மிக துல்லியமாக கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால அளவு 9 மாதத்திலிருந்து தற்போது 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. 18 - 59 வயது உடையவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசியை ரூ.386.25 கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளலாம். மேலும், தொழில்நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க அந்தந்த நிறுவனங்கள் உறுதுணையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போல்லா மற்றும் காவேரி மருத்துவமனைகளில் சர்வீஸ் கட்டணமில்லாமல் தொழில் நிறுவனங்களின் பணிபுரியும் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க உறுதுணையாக இருப்போம் எனதெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரான் 8 வகையான உருமாறிய வைரஸ்கள் PF4 , PF 5 என்கின்ற வைரஸ் தான் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது. எந்த வகையான வைரஸ் உருமாற்றமாக இருந்தாலும் பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் உயிருக்கு ஆபத்து என்பது குறைவு.
ஏற்கனவே, நோய் எதிர்ப்பு சக்தி 88 முதல் 90 சதவீதம் அதிகரித்துள்ளதால் உயிரிழப்பு குறைவாக உள்ளது. தற்போது பரவும் வைரஸ் தொற்று மிகவேகமாக பரவுதல் குடும்பத்தில் ஒருவருக்கு வந்தாலும் குடும்பத்திலுள்ள அனைத்து நபர்களுக்கும் பரவுகிறது.
அதனால்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தி உள்ளார்கள். ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் எடுக்கும்போது 10 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டாலும், ஒரு இடத்தில் மருத்துவமனைகளில் 40 சதவீதத்திற்கும் மேல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கைகள் அனுமதிக்கப்பட்டால், மட்டுமே கட்டுபாடுகள் விதிக்கப்படும். ஆனால் தற்போது மருத்துவமனைகளில் 5 சதவீதம் பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். எனவே, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டிய அவசியமில்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியிலிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபடம் இறுதிசெய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்படவுள்ளது. கட்டுமான பணிகள் தொடங்க 6 மாதங்கள் ஆகும்.
கடந்த ஒராண்டு காலமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொடர் வலியுறுத்தியதன் காரணமாக, தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவகல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கோயம்புத்தூர் மாவட்டம்.
No comments
Thank you for your comments