மத்திய அரசு வழங்கிய லீடர் விருதை முதல்வர் ஸ்டாலினிடம் காட்டி வாழ்த்து பெற்றார் அமைச்சர் தா.மோ. அன்பரசன்
தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வழங்கிய லீடர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காட்டி அமைச்சர் தா.மோ. அன்பரசன் வாழ்த்து பெற்றார்.
கடந்த 4 ஆம் தேதி மத்திய அரசின் தொழில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வணிகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுப்பதில் சிறந்த மாநிலத்திற்கான லீடர் விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றார்.
புத்தொழில் சூழமைவில் வளர்ந்து வரும் மாநிலம் என்ற விருதினை கடந்த ஆண்டு பெற்ற நிலையில், நடப்பாண்டியில் லீடர் என்ற அந்தஸ்தை தமிழகம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், மத்திய அரசு வழங்கிய லீடர் விருதை காட்டி வாழ்த்துப் பெற்றார்.
இந்த சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சியை அமைத்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசுக்கு லீடர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட லீடர் விருதுக்கு பல்வேறு கட்சியினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

No comments
Thank you for your comments