ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று (07.06.2022) கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
இவ் ஆய்வின் போது மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும் சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் இம்மையத்தில் பயிலும் 235 மாணவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டதில் 2 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 மாணவர்கள் அம்மைய வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஓர் ஆண்டில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு தற்போது உள்ள உருமாறிய வைரஸ் நோய் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என தெரிவித்துள்ளனர். தற்போது தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பிற மாநில மற்றும் பிற மாவட்ட மாணவர்கள் என்பதும், குறிப்பாக கேரளா பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தொற்று பரவாமல் தடுத்திட ஏற்கனவே நாம் கடைபிடித்த முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கூட்டங்களை தவிர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர்ச்சியாக கடைபிடித்தால் ஆரோக்கியமான உடல் நலம் காக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் லேசான தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., துணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.பிரியா ராஜ், மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம்.
No comments
Thank you for your comments