காஞ்சிபுரம் அருகே தரைப்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்- நண்பர்கள் 2 பேர் பலி
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆரணிசேரி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன், கருணாகரன். இவர்களில் பாலகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் அருகே தனியார் கண்ணாடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து டிராவல்ஸ் நடத்தினார். இதில் கருணாகரன் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் வந்தனர்.
பின்னர் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டு இருந்தனர். ஏனாத்தூர் வழியாக அங்குள்ள தரைப்பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதியது.
இதில் பாலகிருஷணனும், கருணாகரனும் தூக்கி வீசப்பட்டனர். பாலத்தின் கீழே தேங்கி இருந்த தண்ணீரில் விழுந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கருணாகரன் பலத்த காயம்அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கருணாகரணை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருணாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிறந்த நாள்விழாவுக்கு சென்று திரும்பியபோது நண்பர்கள் 2 பேரும் விபத்தில் பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments
Thank you for your comments