காஞ்சிபுரத்தில் மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி
காஞ்சிபுரம்,ஜூன் 26-
காஞ்சிபுரத்தில் சென்னை,மதுரை உட்பட 13 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
காஞ்சி ஸ்கேட்டிங் அகாதெமி, ஈகிள் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் ஆகியன இணைந்து காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு சொந்தமான மைதானத்தில் மண்டல அளவிலான திறந்த வெளி ஸ்கேட்டிங் போட்டிகளை நடத்தினார்கள்.
காஞ்சிபுரம் எம்.பி.க.செல்வம் போட்டிகளை தொடக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகர மண்டல தலைவர் எஸ்.கே.பி.சாந்தி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.ஈகிள் கிளப் தலைவர் எஸ்.பாபு வரவேற்று பேசினார்.இப்போட்டிகளில் மதுரை, திருவண்ணாமலை, சென்னை, ராணிப்பேட்டை உட்பட 13 மாவட்டங்களை ஆண்,பெண் இரு பாலரையும் உள்ளடக்கிய 200 பேர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் 4 வயது முதல் 18 வயது வரை உடையவர்கள் கலந்து கொண்டனர்.போட்டிகள் தொடக்க நிலை, நடுநிலை,உயர்நிலை என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நடுவர்களாக 20 பேர் பங்கேற்று வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.ஏற்பாடுகளை ஸ்கேட்டிங் விளையாட்டின் துணை மாஸ்டர்கள் ஆனந்த்,பிரபாகரன்,எஸ்.பாபு,கே.சிவா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் வரும் ஜூலை மாதம் 2 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க அழைத்து செல்லப்படவுள்ளனர்.
No comments
Thank you for your comments