Breaking News

கந்துவட்டி கொடுமையா? உடனே வாட்ஸ்-அப் பண்ணுங்க... தண்டனை உறுதி!

ஈரோடு:

கந்துவட்டி கொடுமை தொடர்பாக புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  Dr. சசிமோகன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கந்துவட்டி கொடுமைகள் இன்றளவும் தொடர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதனால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் ஏராளம். சமீபத்தில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் ஒருவர் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். காவலர் ஒருவரே உயிரை மாய்த்து கொண்டது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கைகள் எடுத்தால் தான் சரிவரும் என்று கருதிய டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது, கந்துவட்டி தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் உடனே விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக அந்தந்த மாவட்ட போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.



அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி பிரச்சினைகள் இருக்கிறதா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருக்கும் வழக்குகளும் தூசு தட்டப்பட்டு வருகின்றன. 

இதுகுறித்து முக்கிய உத்தரவை ஈரோடு மாவட்ட எஸ்.பி சசிமோகன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கந்துவட்டி தொடர்பாக புகார் அளிக்க வேண்டியிருந்தால் அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு வாட்ஸ்-அப் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  Dr.சசிமோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 


ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி பிரச்சினை இருப்பதை காண முடிகிறது. ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை உரிமையாளர் முகமத் ஷெரிப் அவர்கள் முக்கிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது அதிகப்படியான வட்டி வசூலிப்பதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஒருவரை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்துள்ளனர்.


அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் கந்துவட்டி பிரச்சினைகள் இருந்தால் பொதுமக்கள் தயக்கம் காட்ட வேண்டாம்.

உடனே 96552 20100 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகாரை அனுப்பி வையுங்கள். மேலும் காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். 

இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவித்தவரின் பெயர், முகவரி உள்ளிட்டவை ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments