ஈரோட்டில் 800 ஆண்டுகள் பழமையான சத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகளை அமைச்சர் ஆய்வு
ஈரோடு, ஜூன் 13-
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே 800 ஆண்டுகள் பழமையான சத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகளை அமைச்சர் இன்று ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சத்தீஸ்வரர் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்களில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது,- முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் துறை சார்ந்த மக்கள் நல திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஈரோடு மாநகர் பெரிய மாரியம்மன் திருக்கோவில் உப கோவில்களில்களான மொடக்குறிச்சி வட்டம், கஸ்பாபேட்டை சத்தீஸ்வரர் கோவில், ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சத்தீஸ்வரர் கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இக்கோவில் மிகவும் பழுதடைந்திருந்த நிலையில் தற்போது திருப்பணிகள் செய்திடும் வகையில் பாலாலயம் செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்று மேற்கண்ட கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து விரைவில் குடமுழுக்கு நடத்தவும், பூஜைகள் மற்ற விழாக்கள் நடைபெறவும், கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களை உடனடியாக மீட்டு கோவிலுக்கு வருவாய் பெருக்கிடவும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் அன்னக்கொடி, இந்து சமய அறநிலை துறை உதவி கோட்ட பொறியாளர் காணீஸ்வரி, தொல்பொருள் துறை உதவி இயக்குநர் (ஓய்வு) சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் தாமோதரன் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் அருள்முருகன், சுகுமார் உள்பட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.



No comments
Thank you for your comments