கிராம சபைக் கூட்டங்களில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு பங்கேற்பு..
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் ஊராட்சிகளில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் ஊராட்சிகளில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01.05.2022) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த கூட்டத்தில், ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதி ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்தி, பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு, செலவு கணக்கு (படிவம் 30-இன் சுருக்கம்) வைக்கப்பட்டிருந்தது. கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் போது உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கப்பட்டது.
மேலும் இச்சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், கூட்ட பொருட்களை ஊராட்சி மன்ற செயலர்களால் படிக்கப்பட்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் , திருபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள், திருபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, நடுவீரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திரு.சுப்பிரமணி, துணைத் தலைவர் திருமதி.ஞானமணி சகாயராஜ், சோமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ஆரிக்கியம் ஜெயபால், துணைத் தலைவர்கள் திருமதி.பவானி ஞானசேகர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments