இலவச தையல் இயந்திரங்கள் வழங்கினார் ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (18.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து சுமார் 313 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட அளவில் சமையல் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2500/-ம், இரண்டாம் பரிசாக ரூ.1500/-ம். மூன்றாம் பரிசாக ரூ.1000/-ம் பரிசுத் தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
சமூக நலத்துறையின் சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.6500/- மதிப்புள்ள மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் ஒரு பயனாளிக்கும், பார்வைத் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் தினமும் பணிக்கு சென்று வர ஒரு மாற்றுத்திறனாளிக்கு இலவச பேருந்து பயண அட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது.
வருவாய்த் துறையின் சார்பில் காஞ்சிபுரம் வட்டம் சின்னையங்குளம் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் 16 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 4 பழங்குடியின மக்களுக்கு குடும்ப அட்டைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சிவ ருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திரு.பா.மணிமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பிரகாஷ்வேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.ரேவதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு.குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments