Breaking News

மே 3ம் தேதி பட்டுச்சேலை விற்பனை கடைகள் அடைப்பு

காஞ்சிபுரம்:

பட்டு நெசவு உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நிலையான விலை நிர்ணயித்தால் இப்பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பட்டு சேலை உற்பத்தி மூலப்பொருட்கள் 130 சதவீதம் விலை உயர்வு குறித்து ஆலோசனை கூட்டம் சி.ஐ.டி.யு., மாநில கைத்தறி சம்மேளன பொது செயலாளர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பட்டு நெசவு தொழில் நெருக்கடி குறித்து விவாதிக்க ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோறா வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.



கூட்டத்தில் பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான கோரா உற்பத்தி விலை குறைப்பு செய்தால் மட்டுமே பட்டு நெசவை காப்பாற்ற முடியும் என பட்டு நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அனைத்து பட்டு நெசவு உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நிலையான விலை நிர்ணயித்தால் இப்பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

பின்னர் சி.ஐ.டி.யூ., மாநில கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் முத்துக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கைத்தறி நெசவுத் தொழிலில் கச்சா பட்டு 130 சதவீதம் விலை உயர்வை கண்டித்தும், மூலக்கூறுகள் விலை உயர்வை கண்டித்தும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோர பட்டு வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், கோயம்புத்தூர், பரமக்குடி உட்பட தமிழகம் முழுவதும் கைத்தறி நெசவு அனைத்து மையங்களில் மே 3ம் தேதி பட்டுசேலை விற்பனை கடை அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கான முடிவு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பட்டு சரிகை சேலை உற்பத்தி சங்க செயலாளர் பெருமாள், வணிகர் வர்த்தக சங்கத் தலைவர் ரங்கநாதன், தொ.மு.ச. தஞ்சாவூர் தங்கவேலு, சி.ஐ.டி.யு., சங்க தலைவர் தஞ்சாவூர் நாகேந்திரன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க துணை தலைவர் இளங்கோவன் மற்றும் பருத்தி பட்டு நெசவு தொழிலாளர்கள், சி.ஐ.டி.யு., சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க தலைவர்கள் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments