காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதம் விதிப்பு- மாசுகட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
காஞ்சிபுரம்:
திடக்கழிவு மேலாண்மையை சரியாக மேற்கொள்ளாததால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதம் விதித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள நகரப்பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 70 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில், 20 டன் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளதாக தெரிகிறது.
குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொட்டுவதற்கு, திருக்காலிமேடு பகுதியில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் உள்ளிட்டைவைகளை தரம் பிரித்து பயோமைனிங் தொழில்நுட்பத்தில் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
எனினும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் உள்ளதால், குப்பை கிடங்கில் அதிகளவில் குப்பை தேங்கியுள்ளன.
மேலும், அடிக்கடி மர்மமான முறையில் குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிவதால், கடும் துர்நாற்றத்துடன் கூடிய கரும்புகை வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு களை சூழ்ந்து வருகிறது.
இதனால், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் சுவாசப்பிரச்சினை உள்பட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக திருக்காலிமேடு குப்பை கிடங்கில் 24 மணி நேரமும் குப்பை தீப்பற்றி எரிந்து வருவதால், 3 கி.மீ., தொலைவில் உள்ள ரயில்வே சாலை வரையில் புகை பரவி வருகிறது.
எனவே குப்பை கிடங்கில் தீயை முழுவதுமாக அணைத்து மீண்டும் தீப்பற்றாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே திடக்கழிவு திரவகக்கழிவு, மேலாண்மை திட்டப் பணிகளை முறையாக செய்யாததால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதமாக சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்து உள்ளது.
இதுகுறித்து, சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருக்காலிமேடு குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் முறையாக இல்லாததால் ரூ.95 லட்சம் மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.38 லட்சம் என காஞ்சி மாநகராட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதுகுறித்து, காஞ்சி மாநகராட்சி பணியாளர்கள் கூறியதாவது:-
குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு உள்ளது. எனினும், கோடைகாலம் என்பதால் தேங்கியுள்ள குப்பையின் அடியில் எப்படியோ தீப்பற்றுகிறது. குப்பை கிடங்கில் தீயை அணைக்க அடிக்கடி தீயணைப்பு வாகனம் வருவதில்லை. அதனால், மாநகராட்சியின் தண்ணீர் லாரிகளை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுகிறோம் என்றனர்.
No comments
Thank you for your comments