Breaking News

தமிழ்நாடுதிறன் மேம்பாட்டுக் கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில்,  தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து பிரிட்டிஷ் உயர் ஆணையர்  (British High Commissioner)  அலெக்ஸ் எல்லீஸ் அவர்கள் முன்னிலையில் இன்று (8.3.2022) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கடந்த 01.03.2022 அன்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி,  கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான புதியதோர் முன்னெடுப்பாக “நான் முதல்வன்” திட்டத்தினை திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக அறிமுகப்படுத்தினார். 

இதன் நீட்சியாக தமிழக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுவது மட்டுமின்றி, நேர்முகத் தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும், தங்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அறிவுசார் இலக்கு மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறும் வகையில் இளைஞர் சமுதாயத்திற்கு திறன் பயிற்சியளித்து உலகெங்கும் தடையின்றி செல்ல ஆங்கில மொழியினை கற்றறியவும் கல்வி மற்றும் கலாச்சாரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்திடவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த சிறப்புப் பயிற்சி தரமான கல்வி மற்றும் சர்வதேச தரத்திலான மதிப்பீடுகளை இளைய சமுதாயத்திற்கு அளித்திட வழிவகுக்கும்.

இங்கிலாந்திலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பிரத்யேக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு பயிற்சியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

இப்பயிற்சி தமிழக இளைஞர்களின் பல்வகையான திறன்களை மேலும் மெருகேற்ற வழிவகை செய்யப்படும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இளைஞர்களின் உயர்கல்வி, திறன் மேம்பாடு, கலை மற்றும் பண்பாடு ஆகியவை வலுப்படுத்தப்படும்.   

பிரிட்டிஷ் கவுன்சில் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து தமிழகத்திலுள்ள நூலக வல்லுநர்கள் தொடர் தொழில்முறை முன்னேற்றத்திற்கும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும்.

இந்நிகழ்ச்சியில்,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்  சி.வி.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர்.கிர்லோஷ்குமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசன்ட்திவ்யா,  பிரிட்டிஷ் தூதரக உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



No comments

Thank you for your comments