பெண் குழந்தைகள் தன்னம்பிக்கையோடு கல்வி பயில வேண்டும்- பள்ளி மாணவிகளிடையே உரையாற்றிய மேயர் கல்பனா ஆனந்தகுமார்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் இன்று (08.03.2022) நேரில் பார்வையிட்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் 19வது வார்டுக்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு, சர்வதேச மகளிர் தினத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும் அவர் பேசியதாவது, “மகளிர் தின விழாவிற்கு வருகை தந்துள்ள மரியாதைக்குரிய மாநகராட்சி ஆணையாளர், கல்வி அலுவலர், நகர்நல அலுவலர், ஆசிரியர்கள், மாணவச்செல்வங்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, கோயம்புத்தூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்வு செய்துள்ளார்கள். அதற்காக, தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், எனக்கு வாக்களித்த பொதுமக்கள் அனைவருக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் பெண்களுக்கு கல்வி பயில வாய்ப்பு தந்தார். முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெண்களுக்கு சொத்துரிமை தந்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தந்தார். இதனால் 50க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கோவையில் பெண்கள் தேர்வு பெற்றுள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆகிய என்னை கோயம்புத்தூர் மாநகராட்சி முதல் பெண் மேயராக தேர்வு செய்துள்ளர்கள். பெண் குழந்தையாக நீங்கள் சிறப்பாக கல்வி பயில வேண்டும், மாமன்ற உறுப்பினர், மேயர், டாக்டர், ஆசிரியராக உயர் பதவிக்கு வரவேண்டும்.
மேலும் தன்னம்பிக்கையோடு கல்வி பயில வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மீண்டும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என பேசிய பின்னர், மணியகாரன்பாளையம் மாநகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி.ச.ஜெ.சபிதா ஸ்ரீ என்ற மாணவி மாநில மற்றும் தேசிய அளவில் சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார். மேலும் அவருடை தங்கை ச.ஜெ.தாரணி அதே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பில் பயின்று வருகிறார். இவரும் மாநில மற்றும் தேசிய அளவில் சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று மூன்றாம் இடம் பெற்று வெங்கலப்பதக்கம் வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மேயர் அவர்கள், துணை மேயர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், கல்வி அலுவலர் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து அம்மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக கிருமிநாசினி, முகக்கவசம், நாப்கின், சோப்பு, நகவெட்டி உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 31வது மாமன்ற உறுப்பினர் வைரமுருகன் என்கிற ரா.முருகன் அவர்கள், மாநகர கல்வி அலுவலர் கே.பாண்டிய ராஜ சேகர், மாநகர நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பெரியாளர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியர் தாமஸ் சேவியர், ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments