Breaking News

அலட்சியம் வேண்டாம்... அறிவுறுத்தம் கோவை மாநகராட்சி

கோவை :

கோவை மாநகராட்சி பகுதியில், இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போடுவதற்கான தவணை தேதி முடிந்தும், 1.80 லட்சம் பேர், தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.



கோவை மாநகராட்சி பகுதியில், தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை, விரல் விட்டு எண்ணும் அளவுக்கு இருந்தாலும், தினமும், 1,000 நபர்களுக்கு  சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. 

வாரந்தோறும் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மாநகராட்சி மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தொற்று பாதிப்பு குறைந்திருப்பதால், மக்கள் மத்தியில் அலட்சியம் ஏற்பட்டிருக்கிறது.

பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். முதல் தவணை தடுப்பூசி, 97 சதவீதத்தினர் செலுத்தியிருந்தாலும், இரண்டாவது தவணை ஊசியை, 90 சதவீதத்தினரே போட்டிருக்கின்றனர்.

தவணை தேதி கடந்தும், 1.80 லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றனர். சுகாதாரப் பிரிவினர் போன் வாயிலாக வலியுறுத்தினாலும், நேரில் சென்றாலும் அக்கறை காட்டுவதில்லை. வீட்டுக்குச் சென்றால் அலட்சியப்படுத்துகின்றனர்.

மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் கூறுகையில், 

'தொற்று பரவல் அலையாக பரவியபோது, மக்களிடம் அச்ச உணர்வு இருந்தது. அப்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ள, வரிசையில் காத்திருந்தனர். இப்போது, அலட்சியமும் அக்கறையின்மையும் காணப்படுகிறது.  இது தவறு கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வீடு தேடிச் சென்று, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி வருகிறோம். அதேபோல், 12-14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஊசியும் செலுத்துகிறோம். விடுபட்டோர் கண்டிப்பாக ஊசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். கூட்டமாக இருக்கும் பகுதிகளில், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்' என்றனர்.

No comments

Thank you for your comments