குறைதீர்க்கும் நாள் கூட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு
ஈரோடு, மார்ச் 14
ஈரோடு மாவட்டம் மாவட்டவருவாய் அலுவலர் டாக்டர். ப.முருகேசன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப்பெற்று, அவற்றின்மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளதுறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (14.03.2022) மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.ப.முருகேசன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவைஉதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலைவசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 216 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பெற்று உரியதுறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.ப.முருகேசன் அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.19,500/- மதிப்பீட்டில் மூன்றுசக்கர சைக்கிள்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் மீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments