பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கீழ் வீடுகட்டுபவர்கள் இரும்பு கம்பிகள் பெற்று பயன்பெற அறிவுறுத்தல்
காஞ்சிபுரம், மார்ச் 3-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் 2021-22-ன் கீழ் வீடுகள் கட்டும் பணிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக நடைபெற்று வருகிறது. இவ்விதம் வீடு கட்டும் பணிகளுக்கு இரும்புக்கம்பிகள் பிரதான செலவாக பயனாளிகளுக்கு உள்ளது.
எனவே, இரும்புக்கம்பிகள் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருவதை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் இரும்புக்கம்பிகளின் விலை நிர்ணயம் செய்திடும் பொருட்டு, மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு ஒரு மெட்ரிக் டன் இரும்புக்கம்பிக்கென சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து ரூ.61,065/- விலைக்கு உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் இதுவரை கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் போக, மீதமுள்ள வீடுகளுக்கு இரும்புக்கம்பிகள் தேவைப்படும் பயனாளிகள் மேற்குறிப்பிட்ட விலையில் துறை மூலம் கொள்முதல் செய்ய தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
No comments
Thank you for your comments