முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமின்
சென்னை:
கள்ள வாக்கு அளிக்க வந்த நபரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு பிரச்சினை தொடர்பாக திமுக-அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் திமுக தொண்டரான நரேஷ்குமார் என்பவரை பிடித்து அவரது சட்டையை கழற்றி ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 10 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமின் மனுவை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
இன்று ஜாமின் மனு விசாரணை நடைபெற்றது. அப்போது, காயம் அடைந்தவர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுவிட்டார் என போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
திருச்சியில் தங்கி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் இரண்டு வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் மீது மூன்று வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் இரண்டு வழக்குகளில் ஜாமின் கிடைத்துள்ளது.
No comments
Thank you for your comments