Breaking News

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயமில்லை- பள்ளிக்கல்வித்துறை

சென்னை:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியானது.

இதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிதாக தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டு அதற்கு வரும் மே 21-ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேசிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சமான தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு என்பதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தொழிற்கல்வி பாடத்துக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தையும் தமிழ்நாடு அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை மாநிலம் முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி பாடத்தை பயின்று வரும் நிலையில், அவர்களின் திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு அட்டவணையில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும், 10-ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை 500 மதிப்பெண்களுக்கே தேர்வு நடத்தப்படுகிறது என்றும், தொழிற்கல்வி பாடத்தில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவசியமல்ல என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

No comments

Thank you for your comments