Breaking News

அணுக்கழிவு பாதாளக் கட்டமைப்பு விவகாரத்தில்... அழுத்தங்களுக்கு தமிழக அரசு பணியக் கூடாது - அன்புமணி

சென்னை: 

"கூடங்குளம் அணு உலையை விட தமிழக மக்களின் பாதுகாப்புதான் அரசுக்கு முக்கியம் ஆகும். அணுக்கழிவு பாதாளக் கட்டமைப்பு விவகாரத்தில் எந்த சமரசத்தையும் அரசு செய்து கொள்ளக் கூடாது" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

"கூடங்குளம் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைப்பதற்கான பாதாள கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அது குறித்து தமிழக அரசுடன் பேச தேசிய அணுமின் கழகத் தலைவர் புவன் சந்திரபதக் அடுத்த வாரம் சென்னை வருவதாக தெரிகிறது.

கூடங்குளம் அணுக்கழிவு பாதாள கட்டமைப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டும்; பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவது தான் அவரது பயணத்தின் நோக்கமாகும். இது தொடர்பான அழுத்தங்களுக்கு தமிழக அரசு பணியக்கூடாது.

கூடங்குளத்தில் அணுக்கழிவு பாதாளக் கட்டமைப்பை ஏற்படுத்தினால், அது தென் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது பாட்டாளி மக்கள் கட்சிதான். அதன் பின்னர் அணுக்கழிவு கட்டமைப்புக்கான எதிர்ப்பு அதிகரித்திருக்கிறது!

கூடங்குளம் அணு உலையை விட தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தான் அரசுக்கு முக்கியம் ஆகும். அதில் எந்த சமரசத்தையும் அரசு செய்து கொள்ளக்கூடாது. தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது" என்று அன்புமணி கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments