Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்? - தேர்தல் ஆணையம்

சென்னை:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்ற விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஒருசில அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். 

தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் போன்ற அரசியல் கட்சி வேட்பாளர்கள் கடைசி நாளான நாளை மறுநாள் அதிகபட்சமாக வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

இதற்கிடையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்ற விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு:-

சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தலில் ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்யலாம். சென்னை மாநகராட்சி தவிர மற்ற மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை செலவு செய்யலாம்.

தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அந்தஸ்தில் உள்ள நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை செலவு செய்யலாம். 2-ம் நிலை மற்றும் முதல் நிலை அந்தஸ்தில் உள்ள நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.34 ஆயிரம் வரை செலவு செய்யலாம். 3-ம் நிலை நகராட்சி வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.17 ஆயிரம் வரை செலவு செய்யலாம்.

இந்த தேர்தல் செலவுக் கணக்குகளை வேட்பாளர்கள் அந்தந்த தேர்தல் அதிகாரிகளிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

No comments

Thank you for your comments