அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா- பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
சென்னை:
அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் அதிகரித்து வருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சான்றிதழ்களும் பெற லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது.
அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் வழங்க கூடாது என அறிவிப்பு பலகையை கட்டாயம் வைக்க வேண்டும். அனைத்து அலுவலங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ் வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் எந்த ஆதாரமும் இல்லாமல், விளம்பரத்திற்காக மட்டுமே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
அதனால், மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, அடுத்த 2 வருடத்துக்கு எந்த பொதுநல வழக்கும் தொடரக்கூடாது என தடை விதிக்கிறோம். வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
No comments
Thank you for your comments