Breaking News

மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விடாது துரத்தும் கிடுக்கிப்பிடி விசாரணை... மீண்டும் சிறையா?

விருதுநகர்:

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்காக விருதுநகர் மாவட்ட குற்றவியல் காவல்நிலையத்தில் ஆஜரானார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது, முன்னாள் அதிமுக நிர்வாகி விஜய நல்லதம்பி உள்ளிட்டோர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்து விட்டதாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜேந்திர பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனிடையே, வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிமன்றம் ஏற்காமல் தள்ளுபடி செய்தது.

விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதால் போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இறுதியில் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் பதுங்கி இருந்த அவரை சுற்றிவளைத்த போலீசார் அதிரடியாக கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரகால நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்கள் பலராமன், பாபு ராஜ் மற்றும் வழக்கறிஞர் முத்துப்பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து கடந்த ஜனவரி 31ம் தேதி ராஜேந்திர பாலாஜி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அன்றைய தினம் கொரோனா நெகடீவ் சான்று இல்லாததால் அன்றைய தினம் விசாரணை நடைபெறவில்லை.

இதற்கு இடைபட்ட காலத்தில் ராஜேந்திர பாலாஜி சார்பில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து 12.02.2022 அன்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதன்படி நேற்று பகல் 11 மணியளவில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன், ஆய்வாளர் கணேஷ் தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

No comments

Thank you for your comments