நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கோவையில் கமல்ஹாசன் 2 நாள் பிரச்சாரம்.
கோவை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், இரு நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், ஒரு மாதம் தங்கியிருந்து, நகரின் முக்கிய பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்தார். இது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இருப்பினும், 1,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். வார்டு வாரியாக, ஒவ்வொரு பூத் வாரியாக பதிவான ஓட்டுக்களை மக்கள் நீதி மய்யத்தினர் ஆய்வு செய்தனர். சில பூத்களில் மட்டுமே பின்தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது. கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள, 100 வார்டுகளில், 77 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நீதி மய்ய மாநில துணை தலைவர் தங்கவேலு கூறுகையில்:-
சட்டசபை தேர்தலில் கூட்டணி பலத்தோடு மோதியும், சொற்ப ஓட்டு வித்தியாசத்திலேயே பா.ஜ., வெற்றி பெற்றது. இப்போது தனித்து நிற்கின்றனர். அவர்களின் பலம் தெரியும். கோவை தெற்கு தொகுதிக்குள், 12 வார்டுகள் இருக்கின்றன. 10 வார்டுகளில் ம.நீ.ம., வேட்பாளருக்கு வெற்றி பிரகாசமாக இருக்கிறது. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, கட்சித் தலைவர் கமல் இரு நாட்கள் பிரசாரம் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments