இன்று முதல் 100% பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள்..!
புதுடெல்லி:
கொரோனா தொற்று குறைந்து வருவதால் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் பிப்ரவரி 15 வரை 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு இதற்கு முன்பு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,
பெருந்தொற்று நிலைமையை ஆய்வு செய்த பின்னர், குறைந்து வரும் கொவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் குறைந்து வரும் தொற்று உறுதிப்படுத்தல் விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முழு அளவிலான பணியாளர்களோடு அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் நேற்று மாலை கூறினார்.
அனைத்து மட்டங்களில் எந்த விதிவிலக்கும் இல்லாமல் அலுவலகங்களுக்கு பணியாளர்கள் நேரில் வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதே வேளையில் அனைத்துப் பணியாளர்களும் அனைத்து நேரங்களிலும் முக கவசங்கள் அணிந்திருப்பதையும் சரியான கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதையும் துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிப்ரவரி 15 வரை 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று இதற்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய அறிவிப்பின்படி, 2022 பிப்ரவரி 7 முதல் வீட்டில் இருந்து பணிபுரியும் வாய்ப்பு எந்த பணியாளருக்கும் வழங்கப்படாது.
No comments
Thank you for your comments