சேறும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?
திருப்பூர், ஜன.10-
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 2வது மண்டலம் வடக்கு 7 வது வார்டு குருவாயூரப்பன் நகரில் இருந்து சிமெண்ட் குடோன் சாலை வழியாக அம்மன் நகர் செல்லும் சாலை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் உள்ளது.
இந்த சாலையை கடந்துதான் பொதுமக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும்... ஆனால் இந்த சாலையோ, குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கி பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளது.
அதுமட்டுமின்றி தண்ணீர் தேங்கி சாலையில் உள்ள மண், சேறும் சகதியுமாக மாறி நடந்து செல்ல முடியாத அவல நிலையில் அப்பாவி மக்கள் தவிக்கின்றனர்.
இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் மரண பயத்தில் சாலையைக் கடக்கவேண்டியதாக உள்ளது என்று அச்சப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி சாலையில் கழிவுநீர்களும், தண்ணீரும் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகின்றது... குப்பை கழிவுகளும் தேங்கி தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை... எங்கள் வாழ்வு கேள்வி குறியாக உள்ளது... வீட்டில் உள்ளவர்கள் வேலை சென்று வீடு திரும்பும் வரை உயிர் பயத்தில் தவிப்பதாக குடும்ப தலைவிகள் புலம்புகின்றனர்...
இனியாவது இவர்களது அவலநிலையை உணர்ந்து மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உரிமையை உரக்கச்சொல்லும் அப்பகுதி மக்களின் குறைகள் அதிகாரிகளின் செவிகளுக்கு எட்டுமா...? மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா...? என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்...
No comments
Thank you for your comments