நான் அரசியல் பேசுவதாக யாரும் கருதவேண்டிய அவசியமில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்
ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மையத்தையும் திறந்து வைத்து, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் 25-01-2022 அன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது,
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர்
முனைவர் க. பொன்முடி அவர்களே,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
திரு.மா. சுப்பிரமணியன் அவர்களே,
துவக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய
உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்
முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்களே,
தொழில்நுட்ப கல்வி இயக்குநர் திருமதி க.லட்சுமிபிரியா, இ.ஆ.ப., அவர்களே,
கல்லூரிக் கல்வி இயக்குநர் முனைவர் சி.பூரணசந்திரன் அவர்களே,
அண்ணாப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ஆர். வேல்ராஜ் அவர்களே,
திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைச்செல்வி அவர்களே,
இஸ்ரோ முன்னாள் இயக்குநர் திரு. மயில்சாமி அண்ணாத்துரை அவர்களே,
பேராசிரியர் பெருமக்களே,
அரசு உயர் அலுவலர்களே,
அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே,
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர்கல்வித் துறையின் சார்பில் நடைபெறும் இந்த விழாவானது எங்களையெல்லாம் ஏன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரால் அமைந்த பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
அறிஞர்களுக்கு எல்லாம் அறிஞர் பேரறிஞர் அண்ணா அவர்கள்! சென்னை கன்னிமரா நூலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான முக்கியமானப் புத்தகங்களைப் படித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அத்தகைய பேரறிஞர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகத்தின் அரங்கத்தில் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள நம்முடைய உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி அவர்களை நான் மனதாரப் பாராட்ட விரும்புறேன்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் இருந்து அவர் மாணவராக அரசியலில் இறங்கி விழுப்புரம் கல்லூரியில் பேராசிரியராக இருந்தபோது அமைச்சராக ஆக பொறுப்பேற்றுப் பணியாற்றி இருக்கிறார். இன்றைய தினம் தமிழகத்தில் இருக்கும் அனைத்துப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் அனைத்தையும் வழிநடத்தக் கூடிய மாபெரும் பணியைச் சுமந்து கொண்டு இருப்பவர் தான் நம்முடைய பொன்முடி அவர்கள்.
அவர் அரசியல், வரலாறு, பொதுத்துறை நிர்வாகம் என பல்வேறு பாடங்களில் முதுநிலை பட்டம் வாங்கியவர். அனைத்துக்கும் மணிமகுடமாக முனைவர் பட்டம் பெற்றவர். உயர் கல்வித்துறையைக் கவனிக்க அனைத்துவகையிலும் பொருத்தமான அனைத்து உயர் கல்வியைப் பெற்றிருக்கக்கூடியவர்.
தமிழ்நாட்டின் உயர் கல்வியை உயரமான நிலைக்குக் கொண்டுவர நித்தமும் உழைத்துக் கொண்டிருக்கக்கூடியவர். அத்தகைய ஒரு முனைப்போடு செயல்பட்டு வரும் முனைவர் பொன்முடியை அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
உயர்கல்வித் துறையில் கருணை அடிப்படையில் 36 வாரிசுதாரர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படை என்ற பிரிவின் கீழ் இந்த வேலைகள் வழங்கப்பட்டு இருந்தாலும், கல்வித் தகுதியின் அடிப்படையில் தான் உங்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி அடிப்படையில் பணி கிடைத்த உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்களுக்குக் கொடுத்த பணியை, இதைவிட வேறு யாரும் சிறப்பாகச் செய்துவிட முடியாது என்று சொல்கின்ற அளவுக்கு நீங்கள் பேர் வாங்க வேண்டும். அதற்கு நான் முன்கூட்டியே உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாருடைய வாரிசு என்பதற்காக உங்களுக்கு இந்தப் பணி கிடைத்துள்ளதோ, அவர்கள் இருந்தால் பெருமைப்படக்கூடிய அளவுக்கு நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்களது குடும்பத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதே விழாவில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் மற்றும் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் 1 மெகாவாட் சூரிய சக்தி மையத்தை துவக்கி வைத்துள்ளேன். இங்கும் சூரிய சக்தியைத் தான் தொடங்கி வைத்துள்ளேன்.
சூரியன் என்று சொன்னாலே அது சக்தி தான். சூரியன் என்ற சொல்லையும், சக்தி என்ற சொல்லையும் யாராலும் பிரிக்க முடியாது. நான் அரசியல் பேசுவதாக யாரும் கருதவேண்டிய அவசியமில்லை. அது தேவையுமில்லை. சூரிய சக்தியை உருவாக்கும் மையத்தைத் தான் நான் குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன்.
கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனக் குழுமத்தின் நிதி உதவியுடன் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் 7.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரிய சக்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் மின் தேவை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்தத் தேவையை பூர்த்தி செய்ய சூரிய ஆற்றலை பயன்படுத்த வேண்டும். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தைப் போல அனைத்து பல்கலைக் கழகங்களும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இது போன்ற முன்னோட்டமான முயற்சிகள் தொடர வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அண்ணா பல்கலைக் கழகமானது பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மையங்களை உருவாக்கி வருவதை அறியும் போது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.
எம்.ஐ.டி. வளாகத்தில் ஏரோநாட்டிகல் துறை சார்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் அண்ணாப் பல்கலைக் கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா வான்வழி சிறிய ரக விமானத்தின் வடிவமைப்பையும், அதற்கான மாதிரிகளையும் தயாரித்துள்ளார்கள். இதற்கு காரணமாக ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அவர்கள் அனைவரையும் தனித்தனியாக பெயரைச் சொல்லி நான் பாராட்டியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசின் நிதி உதவியால் இந்த வான்வழி ஆராய்ச்சி மையம் பல்வேறு ட்ரோன்களை தயாரித்து வழங்கி வருகிறது. முதலில் இது காவல் துறையில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் வான்வழியில் புகைப்படம் எடுக்கவும், பேரிடர் மேலாண்மைக்கும், சுரங்கங்களை அளவீடு செய்யவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற ட்ரோன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
தமிழ்நாட்டின் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு இது முன்மாதிரியாக அமைகிறது. அனைத்துப் பல்கலைக் கழகங்களும், வெறுமனே பட்டம் வழங்கும் பல்கலைக் கழகங்களாக இல்லாமல் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற வேண்டும், ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்து அவர்கள் அர்ப்பணிக்க வேண்டும்.
தமிழகத்தில் தான் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தி அதிகம். இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30க்கும் மேற்பட்டவை தமிழகத்தைச் சேர்ந்தவை தான் என்பதை அண்மைக்கால தரவரிசை முடிவுகளை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது.
பள்ளிகள், மேனிலைப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், உயர் ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருப்பது போல எந்த மாநிலத்திலும் இல்லை.
தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகத்தின் அனைத்து நாடுகளிலும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உயர் பொறுப்புகளை வகிக்கிறார்கள். இந்த இளைஞர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் உயர்கல்வியால் உயர்ந்தவர்கள், உயர்ந்த நிலைக்குச் சென்றவர்கள் தான், அந்த நிலையை இன்னும் கூடுதலாக உயர்த்த வேண்டும்.
ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் இன்னும் அதிகமாக வேண்டும். வெளிநாட்டுகளில் இருக்கும் புதுவிதமான படிப்புகள், பட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் நாம் புகுத்த வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்புகள் இன்று முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது.
· டேட்டா சைண்டிஸ்ட்டுகள்
· சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்
· ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜெண்ட்
· கஸ்டமர் சக்ஸஸ் ஸ்பெஷலிஸ்ட்
· சோஷியல் இன்ஜினியரிங்
· டிஜிட்டல் மார்க்கெட்டிங்
· பிகேவியர் எக்கனாமிக்ஸ்
· கேம் தியரி
· வரலாற்றின் புவியியல்
· பொருளாதாரத்தின் வரலாறு
· யுனிவர்ஸ் குறித்த படிப்புகள்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது போல நிறைய இருக்கிறது. இப்படி என்னென்ன படிப்புகள் எல்லாம் புதுமையாக வந்திருக்கிறதோ அவை அனைத்தையும் கற்க, இன்றைய மாணவர்களை உயர்கல்வி துறையானது அவர்களுக்கு ஊக்கமாக, தூண்டப்படக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.
இது குறித்து உயர் கல்வித்துறை நிபுணர்கள் கூடி மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது. உயர் கல்வியில் - ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும். அதை நோக்கி உயர்கல்வித் துறை செயல்பட வேண்டும் எனக் கேட்டு, இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்க நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி ! வணக்கம் !
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments
Thank you for your comments