ஓசூர் நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஓசூர் நகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கம்
சென்னை:
பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப ஓசூர் நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஓசூர் நகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆலோசனைக் குழு, திட்டக் குழு அமைத்து 06.01.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் தற்போது 10 இலட்சம் பேர் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்கலை ஒழுங்குபடுத்தி, திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதி செய்திட, புதிய நகர வளர்ச்சிக் குழுமங்கள், மதுரை, கோயம்புத்தூர் - திருப்பூர் பகுதி, வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் பகுதிக்கு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, 1972-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை அடிப்படையாக கொண்டு கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தை உருவாக்கிட அரசாணை 22.11.2021 மற்றும் 16.12.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஓசூர் நகர வளர்ச்சிக் குழுமத்தை அமைத்திட 06.01.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓசூர் 190.20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நகரமானது பொன்னையார் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மேலும், அசோக் லேலண்ட், டைட்டன், TVS மோட்டார்ஸ், கேட்டர்பில்லர் மற்றும் சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் போன்ற முக்கிய தொழிற்சாலைகள் இந்நகரத்தில் அமைந்துள்ளது. ஓசூர் நகரம் கடந்த 30 ஆண்டு காலத்தில் அதீத மக்கள்தொகை பெருக்கத்தால் அதன் உட்கட்டமைப்பு வசதிகளில் பெரும் இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக இந்நகரத்தில் சாலை, சுகாதாரம், கல்வி, குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வசதிகள் ஒழுங்கற்ற வளர்ச்சியை பெற்றுள்ளது.
ஓசூர் நகர வளர்ச்சிக் குழுமம்
ஓசூர் நகரின் சீரான வளர்ச்சிக்காக தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ஓசூர் முழுமைத் திட்டம், ஓசூர் நகரின் வருங்கால வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக அமையும். இம்முன்னோக்கு திட்டமானது, ஓசூர் நகரின் திட்டமிடல் பகுதியின் அனைத்து துறைகளின் வளர்ச்சியின் தேவைகளை எதிர்நோக்கி தயாரிக்கப்படும்.
ஓசூர் நகர வளர்ச்சிக் குழுமத்தை அமைத்திட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களை தலைவராகவும், மாவட்ட ஆட்சித்தலைவரை துணைத் தலைவராகவும் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர் நகர வளர்ச்சிக் குழும அமைப்பின் பணிகள்
இந்த அமைப்பின் மூலம் ஓசூர் நகரப் பகுதிகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும். அத்தகைய திட்டங்கள், புதிய நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் கீழ், மண்டல திட்டம் / முழுமையான திட்டம் / விரிவான வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றை வழங்கும்.
மேலும், ஓசூர் நகர் பகுதிகளில் உள்ள வளர்ச்சிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதை ஒருங்கிணைத்தல், திட்டங்களை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுதல், நிதியுதவி அளித்து திட்டங்களை செயல்படுத்துதல், அரசால் பரிந்துரைக்கப்பட்ட / ஒதுக்கீடு செய்யப்பட்ட பிற பணிகளையும் மேற்கொள்ளும்.
ஆலோசனைக் குழு
ஓசூர் நகர வளர்ச்சி குழுமத்தின் வளர்ச்சி திட்டங்களை தயாரித்து செயல்படுத்தி ஆலோசனை வழங்கிட 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
திட்டக்குழு
ஓசூர் நகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அவர்கள் பணி மேற்கொள்ள, திட்டக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள முதுநிலை நகர திட்டமிடல் அலுவலர், பொறியாளர் மற்றும் இதர அலுவலர்கள் உதவுவர்.
ஓசூர் நகர வளர்ச்சி குழும அமைப்பானது, ஓசூர் நகரின் சீரான வளர்ச்சிக்கும், சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடவும், நன்கு திட்டமிடப்பட்ட நகரமாக உருவாவதற்கும் வழிவகுக்கும்.
No comments
Thank you for your comments