Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ... அதிமுக-பாஜக இடையே மோதல்!

ஈரோடு, ஜன.25-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடன் பாஜக பேசும் டீல் அரசியல் களத்தை சூடுபறக்க செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஏமாற்றமளித்த கொங்கு மண்டலத்தில் சற்றே ஆறுதல் அளித்த ஒரு சில தொகுதிகளில் ஈரோடு மாவட்டமும் அடங்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா, ஈரோடு மேற்கு தொகுதியில் திமுகவை சேர்ந்த எஸ்.முத்துசாமி, மொடக்குறிச்சி தொகுதியில் பாஜகவை சேர்ந்த சி.கே.சரஸ்வதி ஆகியோர் எம்.எல்.ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர்.  

எனவே ஈரோட்டில் திமுக கூட்டணி 2, அதிமுக கூட்டணி 1 தொகுதியை தங்கள் வசம் வைத்திருக்கின்றன. அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என மொத்தமாக கைப்பற்ற அதிமுக வியூகம் வகுத்துள்ளது. மறுபுறம் திமுகவும் அதிரடியான திட்டங்களுடன் உள்ளாட்சி 

இந்த மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய நகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தாழ்த்தப்பட்டோர் & பொதுப் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான நேர்காணல்களை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் அதிமுகவிற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது கூட்டணியில் இருக்கும் பாஜக, தங்களுக்கான சீட் ஒதுக்கீடு தொடர்பாக பெரிய லிஸ்டே கொடுத்துள்ளதாம். அதில், ஈரோடு மாநகராட்சி மேயர், மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வார்டுகள், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர், 12 பேரூராட்சி தலைவர் பதவிகளை ஒதுக்குமாறு அதிமுகவிடம் பாஜக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே மொடக்குறிச்சி தொகுதி பாஜக வசமிருப்பதால், அதற்கு உட்பட்ட மொடக்குறிச்சி, கொடுமுடி, சிவகிரி, அவல்பூந்துறை, வெங்கம்பூர், சென்னசமுத்திரம் உள்ளிட்ட பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு கடிவாளம் போட்டுள்ளது. இவற்றை கேட்டு பெற்று போட்டியிட்டு தங்கள் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.

இதன்மூலம் கட்சியை மேலும் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விஷயம் அதிமுக தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்தளவிற்கு அதிமுக இறங்கி வருவது கடினம் தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

அதேசமயம் தனது கட்சியின் வளர்ச்சிக்காக வியூகம் வகுத்து செயல்படும் பாஜகவும் அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்காது என்று சொல்லப்படுகிறது.

முடிந்தவரை மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகள் விஷயத்தில் பாஜக கறார் காட்டவும் வாய்ப்புண்டு. இதனால் ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக அதிமுக, பாஜக இடையிலான மோதல் போக்கு வலுப் பெறவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

No comments

Thank you for your comments