நாடாளுமன்ற கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
புதுடெல்லி, டிச. 22-
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் முடியும் முன்னர் ஒரு நாள் முன்னதாகவே புதன்கிழமையன்று ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் நவம்பர் மாதம் 29ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 23ம்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் மாநிலங்களவையிலும் குளிர்கால கூட்டத்தொடரின் பதினெட்டாவது நாள் இன்று காலை 11 மணிக்கு துவங்கின.
குளிர்காலக் கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களுக்கு அவையில் இருந்து நீக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் பிரேக் ஓ பிரியன் புதன்கிழமையன்று காந்தி சிலை அருகே கூடி உள்ள 12 மக்களவை உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டார்.
மாநிலங்களவையில் இருந்து நீக்கப்பட்ட 12 உறுப்பினர்களும் காந்தி சிலை அருகே ஒரு பாராளுமன்ற மாதிரி கூட்டத்தை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.
மக்களவை ஒத்திவைப்பு
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவை கூடியதும் நாடாளுமன்றம் இயங்கும் விதம் குறித்து கருத்து தெரிவித்தார் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி மட்டும் அவையின் உற்பத்தித்திறன் 204 சதவீதமாக இருந்தது 17 நாட்களில் ஒட்டுமொத்தமாக 18 மணி நாற்பத்தி எட்டு நிமிடங்கள் மக்களவையில் வீணடிக்கப்பட்டுள்ளது ஒத்திவைப்பு காரணமாக இந்த நேரம் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது என்று ஓம் பிர்லா தெரிவித்தார்.
மங்கோலியா நாட்டில் இருந்து வந்துள்ள தூதுக்குழு ஒன்று மக்களவையை பார்வையிட வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
அவையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார்
மக்களவை உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் கூட்ட நடவடிக்கைகளில் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்தார். மற்றும் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி செய்தியாளர்களுக்கு அவர் நன்றி கூறினார்.
எல்லா உறுப்பினர்களும் எழுந்து நிற்க வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.
அத்துடன் மக்களவை உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினார்கள்.
மாநிலங்களவை ஒத்திவைப்பு
மாநிலங்கள் அவை இயங்கும் முறை குறித்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அதிருப்தி தெரிவித்தார்.
அவை தன்னுடைய திறமையை முழு அளவில் பயன்படுத்தவில்லை. இதைவிட நன்றாக மாநிலங்களவை இயங்க முடியும்.
மாநிலங்களவையை சிறப்பாக இயங்கச் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் அனைவரும் சிந்திக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
முன்னதாக மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பெண்களின் திருமண வயது 21 ஆக அதிகரிப்பு, தேர்தல் சட்ட திருத்தம் உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டன.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிலக்கரி & சுரங்கத்துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி, இணையமைச்சர்கள் திரு.அர்ஜூன் ராம் மெஹ்வால், திரு.வி.முரளீதரன் ஆகியோர் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
29 நவம்பர் 2021 திங்கட்கிழமை அன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், 23 டிசம்பர் 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 22 டிசம்பர் 2021 உடன் ஒத்திவைக்கப்பட்டது.
முக்கியமான அரசு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதால், இந்தக் கூட்டத் தொடர் ஒருநாள் முன்கூட்டியே முடிவடைந்தது என்று தெரிவித்தனர்.
24 நாட்களில் 18 அமர்வுகளாக இந்தக் கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் 13 மசோதாக்கள் (மக்களவையில்-12, மாநிலங்களவையில்-1) அறிமுகப்படுத்தப்பட்டன.
2021-22 ஆம் ஆண்டுக்கான துணை மானியக் கோரிக்கைகள் தொடர்பான நிதி ஒதுக்க மசோதா உட்பட 11 மசோதாக்கள் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டன.
மத்திய கண்காணிப்பு ஆணையத் திருத்தச் சட்டம் சிறப்பு காவல் அமைப்பு சட்டம், போதைப் பொருட்கள் திருத்தச் சட்டம் போன்ற 3 அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மசோதாக்களும் இரு அவைகளாலும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
உயிரி பன்முகத்தன்மை (திருத்தச்) சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கும் 5 மசோதாக்கள் நிலைக்குழுக்களின் பரிசீலனைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மேலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா, அணை பாதுகாப்பு மசோதா, இனப்பெருக்க தொழில்நுட்ப திருத்த மசோதா, வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) மசோதா, தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (திருத்த) மசோதா, உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த அமர்வின் போது மக்களவை 82% அளவிற்கும், மாநிலங்களவை 42% அளவிற்கும் இயங்கி உள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784165
No comments
Thank you for your comments