நீட் தேர்வு விவகாரத்தில் சட்டசபை தீர்மானம் மக்களை சந்திக்க கல்வியாளர்கள் முடிவு
சென்னை, டிச.29-
நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவலியுறுத்தி வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த போவதாக கல்வியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து கல்வியாளர்கள் அடங்கிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர், பொதுசெயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, அளித்த பேட்டி:
தமிழக சட்டபேரவையில் நீட் தேர்வை திரும்ப பெற வலியுறுத்தி, மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது, இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டியது கவர்னரின் கடமையாகும் ஆனால் கவர்னர் திட்டமிட்டு காலதாமதப்படுத்தி வருகிறார்.
இது ஜனநாயகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாகும், மக்கள் நலனுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். இந்த சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வைப்பது தொடர்பாக கவர்னருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறீர்களா, அப்படியானால் அவர் எழுதிய பதில் என்ன என்பது தொடர்பாக முதலமைச்சருக்கு தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் மனு அனுப்பியிருக்கிறோம், இதுவரை அந்த மனு குறித்து பதில் ஏதும் இல்லை.
நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள தகவல் உரிமை சட்ட மனுவுக்கு, அவர் பரிசீலனை செய்து வருவதாக பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காலதாமதப்படுத்தக்கூடாது, நீட் தேர்வை திரும்ப பெறும் மசோதாவுக்கு உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதல் பெறும் வகையில் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 2022 ஜனவரி 1 ம்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதனை தொடர்ந்து ஜனவரி 30ம்தேதி கல்வியாளர்கள் உண்ணாவிரதம் நடத்துவது என்றும் ஜனாதிபதியின் கிடைக்காவிட்டால் காலவரையற்ற தனி நபர் உண்ணா விரதத்தை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம், இது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோருவோம், இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தலைவர் முனைவர் ரத்தினசபாபதி, துணைத்தலைவர் முனைவர் முருகையன், தமிழ்நாடு பெற்றோர் மாணவர் சங்கத்தின் தலைவர் அருமை நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments