டாஸ்மாக் மதுபானக் கூடம் டெண்டர் ஏலத்தின் போது பாதுகாப்பு கோரி மனு
காஞ்சிபுரம், டிச.28-
வரும் டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெறும் டாஸ்மாக் மதுபானக் கூடம் டெண்டர் ஏலத்தின் போது பாதுகாப்பு வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், பார் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் வழங்கினார்கள்.
சென்னை மண்டலத்திலுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில், மதுபான கூட்டங்கள் நடத்தும் உரிமத்திற்கான டெண்டர் ஏலம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி மாவட்ட மேலாளர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஓரிக்கை சிட்கோ வளாகத்தில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்காண டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் உரிமம் வழங்குவதற்கான டெண்டர் ஏலம் நடைபெறுகிறது.
டெண்டர் ஏலத்தில் கலந்து கொள்ள மதுபான கூடங்கள் அமைந்துள்ள கட்டடங்களின் உரிமையாளர்களின் தடையில்லா சான்று அவசியம் வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஆணை வழங்கியுள்ளது.
இருப்பினும் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்களின், பெயர்களை பயன்படுத்தி டெண்டர் ஏலத்தில் சிலர் குழப்பம் விளைவிக்க நினைக்கிறார்கள். அதனால் டெண்டர் ஏலம் நடக்க இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பு வழங்கிட கோரி, பார் உரிமையாளர்கள், பார் கட்டட உரிமையாளர்கள், தொழிலாளர் நலச் சங்கத்தினை சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர்.
No comments
Thank you for your comments