Breaking News

சிசுவை கழிவறையில் அமுக்கி கொன்ற தாய்- போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்

தஞ்சாவூர்

பச்சிளம் குழந்தையை கழிவறையில் அமுக்கி கொலை செய்த வழக்கில் தாயை கைது செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை நகரில் மையப்பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு அமைந்துள்ளது. இதன் அருகில் நோயாளிகள் பயன்பாட்டுக்காக ஒரு நவீன கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவறை தொட்டியில் நேற்று முன்தினம் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை தண்ணீரில் பிணமாக கிடந்தது. தகவல் அறிந்த மருத்துவ கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த தேதியில் இருந்து கழிவறை பகுதிக்குள் சென்றது யார்? என்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

மேலும் அன்றைய தினம் வருகை பதிவேட்டில் 250 பேர் வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் 20 பேர் யாரிடமும் கூறாமல் திரும்பி சென்றதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த 20 பேரின் விவரங்களை சேகரித்த போலீசார் அவர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இது தவிர கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளில் ஒரு இளம்பெண் கழிவறைக்கு சென்று 1 மணி நேரம் கழித்து வெளியே வந்த காட்சி பதிவாகி இருந்தது. மேலும் அந்த பெண்ணும் யாரிடமும் சொல்லாமல் சென்ற 20 பேரில் ஒருவர் என்பது தெரிய வந்தது. இதனால் அந்த பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து அந்த பெண் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் பிரியதர்ஷினி (வயது 23) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் ஆலக்குடிக்கு சென்று பிரியதர்ஷினியை பிடித்து விசாரணைக்காக மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. 

போலீஸாரிடம் பிரியதர்ஷினி கூறும்போது, 

எனக்கு திருமணமாகவில்லை. நான் திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்தேன். அப்போது உடன் வேலை பார்க்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் நான் கர்ப்பம் அடைந்தேன். பலமுறை அவர் கர்ப்பத்தை கலைக்க சொல்லி என்னை வற்புறுத்தினார். இதனால் என்னை அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விடுவாரோ என்று பயந்தேன். மாதங்கள் அதிகரிக்க எனக்கு மேலும் பயம் அதிகரித்தது. எல்லோருக்கும் தெரிந்தால் அவமானம் ஆகி விடுமே என்று அச்சமடைந்தேன்.

இதனால் நான் தஞ்சைக்கு திரும்பி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி வேறு நோய் உள்ளதாக கூறி உள்நோயாளியாக சேர்ந்தேன்.

எனக்கு பிரசவ வலி அதிகமானதால் 4ம் தேதி அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைக்கு சென்றேன். வலி அதிகமாகவே சுயமாக பிரசவம் பார்த்தேன். அதில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையை வீட்டுக்கு தூக்கி சென்றால் அவமானம் ஏற்படும் என்பதால் மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையை நவீன கழிவறையில் பிளஸ் டேங்கில் உயிருடன் போட்டு விட்டு வெளியே வந்து விட்டேன்.

இதில் சிறிது நேரத்தில் மூச்சு திணறி குழந்தை இறந்தது. பின்னர் எதுவும் தெரியாதது போல் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறாமல் வீட்டுக்கு சென்றேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து குழந்தையை கொலை செய்ததாக தாய் பிரியதர்ஷினியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் பிரியதர்ஷினிக்கு அவரது பெற்றோர் உடந்தையாக இருந்தனரா? என்பது குறித்து தந்தை பன்னீர்செல்வம், தாய் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், செவிலியர்கள் யாராவது உதவி புரிந்தனரா? என்றும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

No comments

Thank you for your comments