Breaking News

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கல்...

சென்னை:

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது. மகளிரின் முன்னேற்றத்திற்காக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் துவங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 7 இலட்சத்து 22 ஆயிரம் குழுக்களுக்கு, ஒரு இலட்சத்து நான்காயிரத்து பதிமூன்று கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டு, ஏழை எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இன்று (14.12.2021) நடைபெற்ற விழாவில், 1,730 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு105 கோடி ரூபாய் மதிப்பிலான  வங்கிக் கடன்கள் / நலத் திட்ட உதவிகளை நேரடியாக வழங்கி,   சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றம்  குறித்தும், சுய உதவிக் குழு இயக்கத்தில் இணைந்து அவர்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்தும், பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கு தேவையான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும்  ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வங்கி கடன் மற்றும் பிற திட்ட உதவிகள் விவரம் :


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 52,574 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 6,83,462 பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 2,485.96 கோடி ரூபாய் வங்கிக் கடன் மற்றும் 30 இ-சேவை மையங்கள் துவக்குவதற்காக 30 பயனாளிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுய தொழில் தொடங்க தொழிற்கடனாக நகர்ப்புறத்தைச் சேர்ந்த 931 குழுக்களுக்கு ரூ.26.60 கோடி, 1,381 தனி நபர்களுக்கு ரூ.16.09 கோடி, 4,702 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 57,451 பயனாளிகளுக்கு தொழில் துவங்கிட வங்கி கடனாக 219.37 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் பாரம்பரிய மற்றும் அதிக வருமானம்  தரும் தொழில்களில், திறன் / அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு, இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தர முதல் கட்டமாக 69 சமுதாயத் திறன் பள்ளிகள் தொடங்க ரூ.66 இலட்சம் மற்றும்  உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பில் உள்ள திறன் இடைவெளிகளைக் கண்டறிந்து, தேவையான தொழில் நுட்ப பயிற்சிகளும், உற்பத்தி செலவினைக் குறைத்து, வருமானத்தை பெருக்கிடும் பயிற்சிகளும் வழங்க 37 சமுதாய பண்ணை பள்ளிகள் துவங்க ரூ. 26 இலட்சம், உற்பத்தியாளர் குழுக்களுக்கான துவக்க நிதியாக 90 குழுக்களுக்கு ரூ. 68 இலட்சம் மற்றும் தொழிற்குழுக்களுக்கான  துவக்க நிதியாக 30 குழுக்களுக்கு ரூ. 23 இலட்சமும் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் போலவே இணையாக இதேநேரத்தில் அனைத்து இதர மாவட்டங்களிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை காணொலி வாயிலாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பயனாளிகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 58,463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் / நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் இன்று (14.12.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் 861 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 12,055 உறுப்பினர்களுக்கு ரூ.40.72 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் / நலத் திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்ந்த பயனாளிகளுக்கு ரூ.9.00/- இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மொத்தம் 888 பயனாளிகளுக்கு ரூ.40.81/- கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு பொது சுகாதார துறையின் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவத்துறை ஆய்வாளர்கள் செவிலியர்கள் என 84 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதர்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்களும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர் அவர்களும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்களும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.ஆ.மனோகரன் அவர்களும், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம் அவர்களும், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் திரு.ஜி.ஸ்ரீனிவாச ராவ் அவர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம். 


No comments

Thank you for your comments