Breaking News

தமிழக மீனவர்களை இலங்கையிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தமிழக எம்பி.க்கள் நேரில் கடிதம்

சென்னை, டிச.22-

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தை மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தலைமையில் திமுக உறுப்பினர்கள்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை நேரில் சந்தித்து, தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து வலியுறுத்தி வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.12.2021) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு, கடந்த 19.12.2021 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்படம் பகுதிகளைச் சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளை மீட்பதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்குள் மீண்டும் 2 படகுகளில் மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலாட்டி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற அச்சமூட்டும் நிகழ்வுகள் / தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதை தடுத்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி, பாக் ஜலசந்தியில் மீன்பிடிப்பதற்கான நமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவதும், மீனவர்களின் உயிர் மற்றும் உடைமைகளை காப்பதும் நமது கடமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையிடமிருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.    

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (21.12.2021) எழுதிய இக்கடிதத்தை நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து வலியுறுத்தி வழங்கினார்கள்.


No comments

Thank you for your comments