பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதாவை தேர்வு கமிட்டிக்கு அனுப்ப பரிந்துரை
புதுடில்லி, டிச.22-
பெண்களின் திருமண வயதை 18இல் இருந்து 21ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாவை தேர்வு கமிட்டிக்கு அனுப்பும்படி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுக் கொண்டார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் கோஷ முழக்கங்கள் காரணமாக மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பகல் 2 மணிக்கு மக்களவை துவங்கியதும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுந்து பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
பெண்களின் திருமண வயதை உயர்த்துவதன் மூலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமநிலையை பராமரிக்க முடியும் என்று ஸ்மிருதி இரானி குறிப்பிட்டார். பெண்களுக்கான உரிமைகளை அவர்கள் அடைவதற்கு இந்த மசோதா மிகவும் உதவியாக அமையும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்களவை காங்கிரஸ் அணித்தலைவர் அதிர் ரஞ்சன் சௌதுரி எழுந்து இந்த மசோதாவை எம்பிக்களின் நிலைக்கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மசோதா தொடர்பாக பெண்கள் அமைப்புகளுடனும் எந்த கருத்து பரிமாற்றமும் அரசு செய்யவில்லை என்றும் சவுத்ரி கூறினார் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். அசாதுதீன் ஓவைசி பேசும் பொழுது இந்த மசோதா மூலம் இந்திய சமூகத்துக்கு இந்த அரசு கூற முன் வருகிற செய்தி என்ன என்று புரியவில்லை.
18 வயது நிரம்பிய ஒருவர் தேர்தலில் வாக்களிக்கலாம். இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யலாம். ஆனால் திருமணம் மட்டும் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது.
இந்த மசோதா முஸ்லிம்களின் தனி சட்டத்துக்கு எதிரானது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகம்மது பஷீர் கூறினார்.
கனிமொழி. மற்றும் சுப்ரியா சுலே பேசும்பொழுது, பெண்களின் அமைப்புக்களுடன் முதலில் அரசு பேச வேண்டும். அவர்களின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் சிவில் சமூகம் என்ன கருதுகிறது என்று தெரிந்துகொள்ள முயற்சிக்காமல் இந்த மசோதாவை கொண்டு வருவதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பினர்.
இந்த மசோதாவை கொண்டு வரும் முறை கண்டனத்துக்கு உரியது என்று அவர்கள் இருவரும் கூறினர்.
ஜனநாயகத்தை பொருத்தமட்டில் நாம் 75 ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறோம் . திருமண விஷயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவதில் நாம் பின்தங்கி இருக்கிறோம்.
திருமண வயதை இருபத்தி ஒன்று ஆக உயர்த்தினால் அதனை அமல் செய்வதற்கு கிராமப்பகுதியில் பெண்களுக்கு உள்ள வாய்ப்பு வசதிகள் என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இது நமக்கு பெருத்த அவமானம் என்று ஸ்மிருதி இரானி கூறினார்.
திருமண வயதை அடையாத நிலையிலேயே 20 லட்சம் பேருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிகள் நடந்தன.
அதனை அரசு வெற்றிகரமாக தடுத்துள்ளது. திருமண வயதைப் பொறுத்தமட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான நிலை இருக்க வேண்டும் என்று சமூகத்தில் கோரிக்கைகள் எழுந்தன. அதன் பிறகு இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொள்வதால் இந்த மசோதாவை தேர்வு கமிட்டிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அமைச்சர் அமைச்சர் இரானி தெரிவித்தார்.
காஸ்ட் அக்கவுன்டன்ட் தொடர்பான மசோதாவையும் தேர்வுக் கமிட்டி அனுப்பும்படி அர்ஜுன்ராம் மேஹ்வால் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் மக்களவை இன்று காலை வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
No comments
Thank you for your comments