மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
தூத்துக்குடி :
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் வைத்து மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகப்பைகுளம் பகுதியில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று (20.12.2021) மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், இன்றைக்கு செல்போன் இல்லாதோர் யாரும் இல்லை. அது அறிவியல் வளர்ச்சி என்றாலும் அதில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது நல்ல விதமாக நமது தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மாணவ, மாணவியருக்கு மிக அவசியமான ஒன்றாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த வகையான பாலியல் குற்றங்களுக்கென தனியாக சட்டங்கள் உள்ளது. அதில் மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு செல்போனும் ஒரு காரணமாக உள்ளது. பெண்கள் தேவையில்லாமல் தங்களது புகைப்படங்களையோ, சுய விவரங்களையோ சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், அதனை பற்றிய விழப்புணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகதான் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென இலவச தொலைபேசி எண்கள் 1091, 1098, 181, மற்றும் 14417 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உங்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்வியோடு கூடிய ஒழுக்கம் மாணவர்களுக்கு முக்கியமானதாகும், எனவே கல்வியை நல்ல முறையில் கற்று வருங்காலத்தில் சாதனையாளர்களாக திகழ வேண்டும், ஆகவே மாணவ மாணவிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் கிரெனா மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜூ, நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி மற்றும் போலீசார் உட்பட கல்லூரி மாணவ, மாணவியர் பலர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments