பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்.... தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, டிச.7-
ஒமைக்ரான் கொரோனா பரவும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் மாவட்ட செயலாளர் கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழக அரசு ஆண்டு தோறும் தை பொங்கலுக்கு பரிசு பொருட்களும், பணமும் வழங்குவது வாடிக்கையாகும். இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர்சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதை தடுக்க கடும் தண்டனை வழங்க வேண்டும்.
ஒமைக்ரான் கொரோனா பரவும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்றது போல பணப்பட்டு வாடா நடைபெறாமல் தேர்தல் ஆணையம் கவனமுடன் செயல்பட வேண்டும்.
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணையை கேரள அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் 152 அடியாக உயர்த்த வழி செய்ய வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில், பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், தலைமை கழக நிர்வாகிகள்,மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (6.12.21) நடைபெற்றது.இக்கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றி, கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது pic.twitter.com/8YhB7GcArS
— Vijayakant (@iVijayakant) December 6, 2021

No comments
Thank you for your comments