சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு வினாத்தாளில் பெண்களை இழிவுபடுத்தும் கேள்வி... மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்...
புதுடெல்லி, டிச.13
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு முதல் பருவ ஆங்கில பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட ஒரு வினா மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு 2 கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. 12-ம் வகுப்புக்கு தற்போது தேர்வு நடந்து வருகிறது. 10, 12-ம் வகுப்பு முதல் பருவ பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கணிதம் மற்றும் ஆங்கிலம் வினாக்கள் விடையளிக்க முடியாத அளவுக்கு கடினமாக கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மீது மற்றும் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. 10-ம் வகுப்பு முதல் பருவ ஆங்கில பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட ஒரு வினா மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பெண்களுக்கு சம உரிமை வழங்கியதால், குழந்தைகளின் ஒழுக்கம் கெட்டு விட்டது, குழந்தைகள் மீது உள்ள பெற்றோர்களின் கட்டுப்பாடுகள் முற்றிலும் அழிந்து விட்டது.
மனைவிக்கு அதிகாரம் அதிகம் கொடுத்துள்ளதால் பிள்ளைகளின் ஒழுக்கம் பாதிக்கப்படுவதாக ஒரு பத்தி கொடுக்கப்பட்டு அதற்கான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.
பாராளுமன்றத்திலும் இது குறித்து வாதிக்கப்பட்டது. காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் சோனியாகாந்தி இந்த பிரச்சினை குறித்து பேசும்போது, ‘தவறான கேள்வி கேட்டதற்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
இந்த பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் வெளிநடப்பு செய்வதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேறினார்கள்.
இதற்கிடையில் இந்த பிரச்சினை குறித்து கல்வியாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
மேலும், அந்த கேள்விக்கு பதிலளித்த மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments