தமிழக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சர்வதேச தரச்சான்று
சென்னை:
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டிற்கு ஐ.எஸ்.ஓ 27001:2013 சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஓ. 27001:2013 சர்வதேச தரச்சான்றினை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவிடம் முதலமைச்சர் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பிரிட்டிஷ் ஸ்டாண்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூஷனால் வழங்கப்பட்ட ஐ.எஸ்.ஓ. 27001:2013 சர்வதேச தரச்சான்றினை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவிடம் இன்றுவழங்கினார்.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில், அவசர கால உதவி எண்கள் 100, 112 மற்றும் 101 அழைப்புகள் கையாளப்படுகின்றன. இது நவீன ஒருங்கிணைந்த தரவு தளம் மற்றும் இதர தொழில்நுட்ப கட்டமைப்புகளுடன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தில் இதுநாள் வரையில் 1.12 கோடி அவசர கால அழைப்பு விவரங்கள் மற்றும் 14.5 லட்சம் ‘காவலன்’ செயலி பயன்படுத்துவோரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தின் தகவல்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு பிரிட்டிஷ் ஸ்டாண்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூஷனால் ஐ.எஸ்.ஓ 27001:2013 சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
இச்சான்றானது, இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டிற்கு பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை கூடுதல் இயக்குநர் அமரேஷ் புஜாரி, காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே, காவல்துறை துணைத் தலைவர் மல்லிகா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments