Breaking News

கடலூர் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நாளை கரை கடக்கும்... ரெட் அலர்ட் எச்சரிக்கை...

சென்னை :

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வியாழக்கிழமை (11-11-2021) மாலை 6 மணி அளவில் கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க திருச்சி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, நாகை, கடலூர் (சிதம்பரம்), மதுரை,  திருவள்ளூர், அரியலூர் (கூடுதலாக பெரம்பலூர்), விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் பொழுது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (11-11-2021) கன மழை கொட்டும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 4 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. இச்சமயத்தில் வங்கக்கடலின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. காலை 8.30 மணியளவில் அது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்தது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து  புதன்கிழமை பிற்பகலில் இருந்து தமிழகத்தின் கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும்.  புதன்கிழமை இரவு தமிழகத்தின் கடலோர பகுதியை நோக்கி பயணத்தை மேற்கொள்ளும். மிக அருகில் வந்து விடும். 

நாளை (வியாழக்கிழமை) காலை வட தமிழக கடற்கரையை விரைவாக நகரக்கூடும்.  நாளை மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட்  

எதிர்பார்க்கப்படும் மழையின் அளவின் அடிப்படையில் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், சில மாவட்டங்களுக்கு  மஞ்சள் அலர்ட் என 3 வகையான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன..

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு இன்று அதி பலத்த மழை தரும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) அதி பலத்த மழையை தரும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும்.

இந்த பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யும்.

ஆரஞ்சு அலெர்ட்

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் அதி பலத்த மழை பெய்யும். இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், மற்ற மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும். இன்று பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும். நாளை (11ம் தேதி) சில பகுதிகளில் அதி பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகள் நியமனம்

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க திருச்சி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, நாகை, கடலூர் (சிதம்பரம்), மதுரை,  திருவள்ளூர், அரியலூர் (கூடுதலாக பெரம்பலூர்), விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


No comments

Thank you for your comments