Breaking News

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை தொடர்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி:

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை 2021-22 நிதியாண்டின் மீதமுள்ள பகுதியிலும், 2025-26 நிதியாண்டு வரையிலும் 15-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை மறுசீரமைத்து தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் என்பது இந்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் மத்தியத் துறை திட்டமாகும். குடிநீர், ஆரம்பக் கல்வி, பொது சுகாதாரம், மற்றும் சாலைகள் உள்ளிட்டவற்றில் தங்கள் தொகுதிகளில் நீடித்து நிலைக்கும் சமுதாய சொத்துக்களை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வளர்ச்சிப் பணிகளை பரிந்துரைக்க உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ 5 கோடி வழங்கப்படும். இரண்டு தவணைகளாக தலா ரூ 2.5 கோடி வழங்கப்படும்.

கொவிட்-19-ஐ எதிர்கொள்ளும் பொருட்டு 2020 ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தாமல், அந்த நிதியை கொவிட்-19 மேலாண்மைக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

நாடு தற்போது பொருளாதார மீட்சியை நோக்கி நடைபோடுவதால், இத்திட்டத்தை மறுசீரமைத்து 2021-22 நிதியாண்டின் மீதமுள்ள பகுதியிலும், 2025-26 நிதியாண்டு வரையிலும் 15-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை தொடர அமைச்சரவை இன்று முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு அமைச்சரவை முடிவுகள் குறித்து இன்று  செய்தியாளர் சந்திப்பில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ அனுராக் சிங் தாக்கூர்   தெரிவித்தார்.

உடன் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர், டாக்டர். எல். முருகன் மற்றும் முதன்மை இயக்குநர் ஜெனரல் (எம்&சி), பத்திரிகை தகவல் பணியகம், ஸ்ரீ ஜெய்தீப் பட்நாகர் ஆகியோரும்  செய்தியாளர்கள் சந்திப்பில்  பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments