அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அறிவிப்பு
சென்னை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2021இல் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் அதிமுகவினரிடமிருந்து விருப்ப மனுக்களை பெறுதல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்று (25-11-2021) அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
நகரப்புற உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுக உறுப்பினர்கள் 26-11-2021 முதல் 28-11-2021 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
இதில் சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள் மட்டும் தங்களுக்கான விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னையைச் சேர்ந்த மாவட்ட கழகங்களின் மூலம் தலைமை கழகத்தில் பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகள் - கட்டணத் தொகை
மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் - ரூ.5000
நகர மன்ற வார்டு உறுப்பினர் - ரூ.2500
பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் - ரூ.1500
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள், அதற்கான கட்டண அசல் ரசீதினை வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதனை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து, கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்
சம்பந்தப்பட்ட மாவட்ட கழகச் செயலாளர்கள் விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விபரங்களை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். அதே போல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு
— AIADMK (@AIADMKOfficial) November 25, 2021
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 2021
கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் கழக உடன்பிறப்புகளிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறுதல். pic.twitter.com/CCdXvLB37K
No comments
Thank you for your comments