வெண்ணந்தூர் ஒன்றிய ஆய்வின்போது மரக்கன்றுகளை பாதுகாக்க அறிவுறுத்திய ஆட்சியர்!
நாமக்கல், நவ.25-
ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த போது மரக்கன்றுகளை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்ட வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும், ஊராட்சி அலுவலக கட்டுமானப்பணிகளை நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.291.46 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலம் மற்றும் அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி அலுவலகத்தையும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடந்துகொண்டிருக்கும் கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில், 1.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் 350 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை ஆட்சியர் பார்வையிட்டார், அப்போது, மரக்கன்றுகளை சுற்றி ஏன் வேலி அமைக்கவில்லை என கேள்வி எழுப்பியதோடு, வேலி அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மசக்காளிப்பட்டி ஊராட்சி, மூலக்காடு கிராமத்தில் ரூ.39.31 லட்சம் மதிப்பீட்டில் ரோடு அமைக்கும் பணியை பார்வையிட்டு அதன் தரத்தை சோதனை செய்து பார்த்தார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
இந்த, ஆய்வின் போது, டிஆர்டிஓ திட்ட இயக்குனர் வடிவேல், வெண்ணந்தூர் பிடிஓ பிரபாகரன், இன்ஜினியர்கள் ஸ்ரீனிவாசன், கவுரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments