Breaking News

கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: 

கனமழையால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை ஆறாவது நாளாக  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் 12-11-2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7-ஆம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 


மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 12.11.2021 அன்று செங்கல்பட்டு மாவட்டம், பள்ளிக்கரணை ரேடியல் ரோடு, நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில், வண்டலூர் வட்டத்திற்குப்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 33 குடும்பங்களுக்கு கீழ்க்கோட்டையூர் கிராமத்தில் உள்ள நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினார். மேலும், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும் வழியில், முதலமைச்சர் அவர்கள் கீழ்கோட்டையூரில் உள்ள தேநீர் கடையில், தேநீர் அருந்தி பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து,  ஆய்விற்கு செல்லும் வழியில், கண்டிகையில் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து, நலம் விசாரித்து, தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூர், அடையாறு ஆறு துவங்கும் இடம் மற்றும் மண்ணிவாக்கம், அடையாறு ஆற்று பாலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 

முடிச்சூர், சி.எஸ்.ஐ. செயின்ட் பால்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் மற்றும் மருத்துவ முகாமை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, முடிச்சூர் டோல்கேட் அருகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். 

முடிச்சூர், மதனபுரத்தில் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில்  முதலமைச்சர் அவர்கள் இறங்கி நடந்து, வெள்ளநீர் அகற்றிடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இறுதியாக, தாம்பரம் பேருந்து நிலையத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களை சந்தித்து, நலம் விசாரித்து, தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில்,  ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், எஸ்.எஸ். பாலாஜி, கு. செல்வப்பெருந்தகை, எஸ்.ஆர். ராஜா, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர்  பி. அமுதா,   செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல் நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments